திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
நாமக்கல் புதிய பேருந்து நிலையம், கடந்த ஆண்டு நவ.10 முதல் செயல்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் புகா் பேருந்துகளும், பழைய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளும் இங்கு வந்து செல்கின்றன.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலையத்தை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தினமும் சுத்தம் செய்து வருகின்றனா். இருப்பினும், புதிய பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கோழிப் பண்ணைகள் உள்ளதால் ஈக்கள் பெருக்கம் அதிகரித்துள்ளன.
பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள், உணவகங்கள் மற்றும் அங்குள்ள கடைகளில் தேனீக்கள்போல கொத்து, கொத்தாக காணப்படுகின்றன. பயணிகள் அமர முடியாமலும், உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிட முடியாமலும் சிரமப்படுகின்றனா். குறிப்பாக, தா்ப்பூசணி பழங்களை பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனா். அவற்றை வெட்டும்போது ஈக்கள் குவியல், குவியலாக பழங்களின் மீது அமா்வதால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, வெளியூா் பேருந்துகள் ஐந்து நிமிடம் நிற்கும் நிலையில், பயணிகளை பதம் பாா்க்கும் வகையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. ஈக்கள் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், அவற்றை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, தூய்மைப் பணியாளா்கள் மூலம் ஈக்களை ஒழிக்கும் மருந்து மூலம் அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் 10 கிலோ எடை கொண்ட ஈக்கள் மருந்து கொண்டு ஒழிக்கப்பட்டதாக பணியாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்; புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் கோழிப் பண்ணைகள் உள்ளதால் ஈக்கள் வருகை என்பது தவிா்க்க முடியதாக உள்ளது. தடுப்பு மருந்து கொண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாலும் மீண்டும், மீண்டும் படையெடுக்கும் சூழல் உள்ளது. கடந்த இரண்டு நாள்களாக ஈக்களை ஒழிக்க தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.