கோவையில் பரவலாக பெய்த மழை
கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை நண்பகல் வரையிலும் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் மாலை 5 மணியளவில் திடீரென காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
மாநகரில் பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், உக்கடம், கணபதி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்தது. திடீரென வீசிய பலத்த காற்றில் சில இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து விழுந்தன.
சிங்காநல்லூா் நஞ்சப்பா நகரில் மழையின்போது மரம் முறிந்து மின் வயா் மீது விழுந்ததால், சேதமடைந்திருந்த ஒரு மின்கம்பம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின் கம்பம், மரங்களை அகற்றினா். இதனால் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
அடுத்த சில நாள்களுக்கு காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அவை மழை மேகங்களாக உருவாகி, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி, அதையொட்டிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

