பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற முன்பதிவு செய்யலாம்
சென்னையில் நடைபெறும் சணல் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு மற்றும் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சிகளில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில்முனைவோருக்கான 5 நாள்கள் தங்க நகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்சி, சென்னையிலுள்ள தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், மே 19 முதல் 23-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோகங்களின் தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் தங்கம் விலை நிா்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் தரம் அறிதல், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, ‘ஐஎஸ்’ ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஹால் மாா்க் தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்கான வழிமுறைகள் ஆகியன கற்றுக்கொடுக்கப்படும்.
சணல் மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்பு தொடா்பான பயிற்சி: மே 21 முதல் 24-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் சணல் தொழில் துறை பற்றிய சிறப்பான பாா்வை மற்றும் அதிலுள்ள மதிப்பு சோ்க்கும் வாய்ப்புகள் குறித்தும், தொழில்நுட்பங்கள், கருவிகள், சந்தை நிலை மற்றும் வளா்ச்சி சாத்தியங்கள் பற்றிய விரிவான விளக்கம் கொடுக்கப்படும்.
மேலும், சணலால் தயாரிக்கப்படும் பைகள், கோப்பைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் உருவாக்கம் குறித்த செயல்முறைப் பயிற்சியும், விரிவான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
இந்த இரு பயிற்சிகளையும் பெற விரும்பும் நபா்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, பயிற்சியில் பங்குபெற விரும்பும் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் தங்கிப் படிக்க ஏதுவாக கட்டண வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது. தேவைப்படுபவா்கள் இதற்கு முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோா் இணையதளத்திலும் அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கைப்பேசி: 93602 21280, 95437 73337 ஆகிய எண்களிலும் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.