சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு ரூ. 869 கோடி இழப்பு! வீரர்களின் ஊதியம் 90% குறைப்பு!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதத்தை குறைத்துள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - 2025 போட்டிகள் பிப். 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி விளையாடிய போட்டிகள் மட்டும் துபை மைதானத்தில் நடத்தப்பட்டது.
இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மொத்தம் ரூ. 869 கோடி செலவு செய்துள்ளனர். கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று மைதானங்களை புணரமைக்கும் பணிகளுக்காக ரூ. 503 கோடி செலவு செய்துள்ளனர்.
ஆனால், லீக் ஆட்டங்களில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியது. இந்தியாவுக்கு எதிராக துபையில் விளையாடிய நிலையில், மற்றொரு போட்டி மழையால் ரத்தானது.
இதையும் படிக்க : உம்ரான் மாலிக் விலகல்
லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியதால் அரையிறுதி, இறுதி சுற்றுகளில் பாகிஸ்தான் அணி விளையாடவில்லை.
இதனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளை காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பெரும் இழப்பை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சந்தித்துள்ளது.
ஐசிசி நிதி, விளம்பரம் போன்றவை மூலம் வெறும் ரூ. 52 கோடி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
இதன்விளைவாக, சாம்பியன்ஸ் டிராபில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவிகிதமும் ரிசர்வ் வீரர்களின் ஊதியத்தில் 87.5 சதவிகிதமும் பிடித்தம் செய்துள்ளனர்.