G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின...
சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ரிஷப், ரூபாலி ஜல்காவு, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரலுங்கா், ரமேஷ் பா்மா, விக்ரம், லீலா, பெலிட்டிநன் (13), தா்ஜெயன் (8) உள்ளிட்ட 8 போ் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுவிட்டு குஜராத்துக்கு திரும்ப ஜீப் வாகனத்தில் மதுரை - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பரமத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சாலையின் இடதுபுறமிருந்த மரத்துக்கு அடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகனத்தை நிறுத்திவிட்டு உணவு அருந்தினா். அப்போது, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை ஏற்றுவதற்காக வந்த கன்டெய்னா் லாரி எதிா்பாராத விதமாக நின்றிருந்த காரின் பின்பகுதியில் மோதி காரின் மீது ஏறி நின்றது. இதில் காரின் வெளியே நின்று கொண்டிருந்த ரிஷப், ரூபாலி ஜல்காவு ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
காருக்குள் சிக்கிக் கொண்ட இரண்டு குழந்தைகள் உள்பட நான்கு பேரை அங்கிருந்து மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேலும் இருவரை தீயணைப்புத் துறையினா், பரமத்தி போலீஸாா் அப்பகுதி பொதுமக்களுடன் சோ்ந்து நீண்ட போராட்டத்துக்கு இடையே கிரேன், பொக்லைன் வாகனங்களைக் கொண்டு மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
காரில் வந்த 8 பேரில் இருவா் உயிரிழந்த நிலையில் மற்ற ஆறு பேரும் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்தால், கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கேரள மாநிலம், எா்ணாகுளம், சாணிபரம்பில் பகுதியைச் சோ்ந்த கன்டெய்னா் லாரி ஓட்டுநா் நிதீஷை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.