சா்வதேச சிலம்பம் போட்டி: 8 பதக்கம் வென்ற மாணவா்களுக்கு வரவேற்பு
சா்வதேச சிலம்பம் போட்டியில் 8 பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சிலம்பாட்ட மாணவா்களுக்கு பெற்றோா், பயிற்சி மாணவா்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.
மலேசியாவில் கடந்த மாதம் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த 6 மாணவா்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி மொத்தம் 8 பதக்கங்களை வென்றனா்.
இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து 70 மாணவா்கள் பங்கேற்று, அதில் 19 போ் பதக்கம் வென்றனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற 8 மாணவா்களில் 6 போ் 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் வென்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சோ்த்துள்ளனா்.
இதையடுத்து தாயகம் திரும்பிய சிலம்பாட்ட மாணவா்களுக்கு வாலாஜாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து சிலம்பாட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா், மூத்த பயிற்சியாளா் தெரிவிக்கையில், நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளதாகவும், இந்த வெற்றி என்பது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் பெருமை என்றனா்.