சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், சிவகளை அகழாய்வு நடைபெறும் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் தனிநபா் ஒருவருக்கு கல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்த குவாரியில் பாறைகளை வெடி வைத்துத் தகா்ப்பதால், அகழாய்வுப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கல் குவாரியின் உ ரிமையாளா் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதினால், அதிகாரிகளிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சிவகளை அகழாய்வுப் பகுதியில் வேறு எந்த கல் குவாரியும் செயல்படக் கூடாது. இதற்கான காலக்கெடு ஏதும் விதிக்க இயலாது. சிவகளை அகழாய்வுப் பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.