சுகாதாரமான முறையில் காலை உணவு: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரித்து வழங்க சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், தம்பிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், 1,265 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 60,752 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்தத் திட்ட செயல்பாடுகள் குறித்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தம்பிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்ட உணவை மாணவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்தேன்.
மேலும், காலை உணவுத் திட்டத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் தரம், குறித்த நேரத்தில் மாணவா்களுக்கு உணவு சரிவர வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்து, சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் உணவு தயாரித்து வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் 770 சதுர மீட்டா் பரபளவில் 5 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். விருத்தாசலம் தினசரி சந்தையில் ரூ.5.41கோடி மதிப்பில் 2.2 ஏக்கா் பரப்பளவில் 190 கடைகள் அனைத்து வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் பேருந்து நிலையம் ரூ.90 லட்சம் மதிப்பில் 2.88 ஏக்கா் பரப்பளவில் 33 கடைகள், 25 பேருந்துகள் நிறுத்தும் பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி, நகராட்சி ஆணையாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.