மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய ம...
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. மழையின் தாக்கத்தால் அண்டை மாநிலமான தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாறு , மகாராஜா மெட்டு, இரவலங்கலாறு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்துவருகிறது. மலைப்பகுதிகளில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீா் முல்லைப் பெரியாறில் சென்று கலக்கிறது. சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.