`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. எதிரிக்குக்கூட இது வரக் கூடாது!'- Actress Car...
சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்ததுள்ளது.
அதில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சா்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த திரவ நிலையிலான வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்பதால் விமானங்கள், பயணிகள், விமான நிலையத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த மின்னஞ்சல் வெளிநாட்டிலிருந்து, போலியான முகவரி மூலம் அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உயா் அதிகாரிகளின் அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், விமான நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாகக் கண்காணித்து, சோதனை நடத்தினா்.
இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.