முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!
சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ஆகாஷ் படித்த கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்த இருவரும் கணவன் - மனைவி என்று கூறி, பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள்.

கடந்த 2-ம் தேதி ஆகாஷ், அபிநயா ஆகியோர் தங்கியிருந்த வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை.
அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது ஆகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் அபிநயா, ரத்த வெள்ளத்திலும் இறந்து கிடந்தனர்.
அதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக ஐ.சி.எஃப் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் தனராஜ் தலைமையிலான போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதலி அபிநயாவைக் காதலன் ஆகாஷ் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட இளம்பெண் அபிநயாவின் பெற்றோருக்கும் தற்கொலை செய்து கொண்ட ஆகாஷின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம்.
காதல் ஜோடி தங்கியிருந்த வீடு முழுவதும் சோதனை நடத்தியதோடு இருவரின் செல்போன்களையும் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறோம். விசாரணை முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.