தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.
சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை சென்னை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது, காரில் வந்த சிலர் சடலத்தை வீசிச் சென்றது தெரிய வந்தது.
சிசிடிவி காட்சியில் பதிவான கார் பதிவெண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணயில், காரில் வந்தவர்கள் ஜனசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியின் ஐடி விங் நிர்வாகி சிவக்குமார், காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி, ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரணை வட்டத்தில் உட்படுத்தப்பட்டனர்.
விணுதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஸ்ரீனிவாசலு என்ற ராயுடு என்று கூறினார்.

விணுதாவின் வீட்டில் 2019 ஆம் ஆண்டுமுதல் ராயுடு வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், விணுதாவின் அறையில் உடை மாற்றியபோது, அவர் அறையின் கட்டிலின்கீழ் மொபைல் இருப்பதும், அதில் தான் உடைமாற்றும் காட்சி பதிவாகியிருப்பதும் கண்டு விணுதா அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இதனை தனது கணவர் சந்திரபாபுவிடம் கூறிய விணுதா, அந்த மொபைலானது ராயுடுவின் என்றும் கூறினார்.
இதனையடுத்து, ராயுடுவிடம் விணுதாவும் சந்திரபாபுவும் விசாரித்தபோது, தெலுங்குதேசக் கட்சி எம்.எல்.ஏ. சுதீர் ரெட்டிதான் பணம் கொடுத்து, விணுதா தொடர்பான அந்தரங்கப் படங்களையும், விணுதா வீட்டில் பேசப்படும் ஜனசேனை கட்சி ரகசியங்கள் குறித்தும் உளவுபார்க்கவும் கோரப்பட்டதாக ராயுடு கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த ஆந்திரப் பேரவைத் தேர்தலில் விணுதாவுக்கு வழங்கப்படுவதாய் இருந்த சீட்டு, சுதீர் ரெட்டிக்கு வழங்கப்பட்டு, அவர் வெற்றியும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, ராயுடுவின் செயல் குறித்தும் சுதீர் ரெட்டி குறித்தும் ஜனசேனை கட்சி தலைமையிடம் விணுதா புகார் அளித்தார். விணுதாவையும் அவரது கணவரையும் சமாதானப்படுத்தி கட்சித் தலைமை அனுப்பியபோதிலும், ராயுடுவை வெளியில் விடாமல் வீட்டினுள் வைத்தே கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், விணுதாவும் அவரது கணவரும்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமையில் கழிப்பறை சென்ற ராயுடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறும் விணுதா, ராயுடுவின் உடலை சென்னை கூவம் ஆற்றின் கரையில் வீசிவிட்டு சென்றதாக தமிழக காவல்துறையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திரத்தின் காவல்துறையினரிடம் தமிழக காவல்துறை கலந்தாலோசித்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.