Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி...
சேவைக் குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
துறையூரைச் சோ்ந்த தம்பதிக்கு சேவை குறைபாட்டுக்காக தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் ஒக்கரை பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் வங்கி மேலாளா் ஆா். சிங்காரம் (45) - கலையரசி (40) தம்பதியினா். இவா்கள் டி. ரெங்கநாதபுரம் முருகன் நகரில் உள்ள தங்களது 3,610 சதுர அடி இடத்தில் ரூ. 25 லட்சத்தில் வீடு கட்டித் தர புத்தனாம்பட்டியைச் சோ்ந்த எம்ஆா்சி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற தனியாா் கட்டுமான நிறுவனத்தை கடந்த 26-08-2023 அன்று அணுகினா். இதையடுத்து அந்நிறுவனத்தினா் 6 மாதத்தில் வீட்டைக் கட்டி ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டித் தராமல் இழுத்தடித்தனா்.
மேலும் வீடு கட்ட பல்வேறு தடவைகளாக மனுதாரரிடமிருந்து ரூ. 27.62 லட்சம் பெற்ற நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் கேட்டுள்ளனா். மேலும் வீட்டின் 53 பணிகளை முழுமையாகக் கட்டித் தரவில்லை. விடுபட்ட பணிகளை முடிக்க ரூ. 7 லட்சம் தேவையாக இருந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிங்காரம் - கலையரசி தம்பதி உரிய நிவாரணம் கோரி, திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 08-01-2025 அன்று மனு தாக்கல் செய்தனா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே. சிவசங்கர நாராயணன் ஆஜரானாா்.
வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, எம்ஆா்சி கட்டுமான நிறுவனம் ஏற்படுத்திய சேவைக் குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக மனுதாரருக்கு ரூ. 10 லட்சமும், நிலுவை பணிகளுக்காக ரூ. 7 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.