ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி? இயக்குநர் விளக்கம்!
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதன் இயக்குநர் சுதா கொங்காரா விளக்கமளித்துள்ளார்.
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் நடிகர் சிவகாரத்திகேயன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பராசக்தி’.
இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அப்போதைய மெட்ராஸ் நகரில் நடைபெறும் வரலாற்று கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின், அறிவிப்பு வெளியான நாள் முதல் அனைவரது ரசிகர்களிடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுடன் பேசிய அதன் இயக்குநர் சுதா கொங்காரா இந்தப் படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில், பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது என்றும் வெறும் 40 நாள்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் மதராசி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ள நிலையில், அவர் திரும்பி வந்தவுடன் பராசக்தியின் படப்பிடிப்பு தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், ‘பராசக்தி’ மற்றும் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் எனப் பேசப்பட்ட நிலையில், ’அவை அனைத்தும் வதந்தி’ எனவும் ‘அப்படி ஒரு அறிவிப்பை தாங்கள் வெளியிடவில்லை’ எனவும் கூறி அந்தச் செய்திக்கு இயக்குநர் சுதா கொங்காரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்-ன் இசையில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் தொடர்பான முக்கிய அரசியல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிக்க:இன்று என்னுள் ஏதோவொன்று... நெகிழ்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!