சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு
Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்..." - இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற பறந்து போ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகியிருக்கிற இப்படத்தின் முதல் பாடல் நேற்றைய தினம் (23.5.2025) வெளியாகியிருந்தது. இப்பாடல் பற்றி சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் ராம்.

அவர் கூறுகையில், "எங்களுடைய பறந்து போ திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம். பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம்பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம்.
எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தித் தோட்டத்தில் படம்பிடிக்கிற ஒரு அரிய வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது.
கற்றது தமிழ் படத்தின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தித் தோட்டத்தில் படம்பிடித்தோம். தங்கமீன்கள் படத்தின் ஆனந்த யாழை பாடலை சூரியகாந்தித் தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால், சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது அப்பாடலுக்காக ஏறினோம். பேரன்பு திரைப்படத்திற்கும் சூரியகாந்தித் தோட்டத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம். அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை.
எனவே, அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம். அதற்குப் பின் பறந்து போவில் தான் சூரியகாந்தி கதைக்குள் வந்தது.
சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், கர்நாடகத்தில் உள்ள மைசூரில் ஒரு சிறு தோட்டமும், அன்னூரில் ஒரு ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைக்கப்பெற்றோம். சூரியகாந்தியைப் படம்பிடிக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது.

ஏனெனில், அது சூரியகாந்தி. சூரியகாந்தியை ஒற்றையாகப் பார்த்தாலும் சரி, கூட்டமாகப் பார்த்தாலும் சரி, அதைக் குறித்து நினைத்தாலும் சரி, அது தரும் உற்சாகமும் பரவசமும் ஒன்றே.
அதன் நிறத்தில் ஒளிரும் கட்டுக்கடங்காத இளம்பிரியத்தை நாம் நம் காலத்தில் பால்யகாலப் பிரியம் என்றும் பப்பி லவ் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைத்திருந்தோம்.
இன்று நம்முடைய மகள்களும் மகன்களும் அதே பிரியத்தை க்ரஷ் என்று அழைக்கிறார்கள். சூரியகாந்தி, க்ரஷ்ஷிற்கான மலர், கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற பாடல்தான் சன்ஃபளவர். மதன் கார்க்கியின் வரிகளில், விஜய் யேசுதாஸ் பாட, சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார்.

ஜூலை 4 பறந்து போ திரையரங்குகளில் வெளியாகும் சமயத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும். சூரியகாந்தி பூக்கும் காலம் அது. சூரியகாந்திப் பூக்களோடு பறந்து போ திரைப்படம் பார்க்க வாருங்கள்.
சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், மற்றும் சில குட்டிப் பிசாசுகளும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.