நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து: நாடாளுமன்றத்தில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு!
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் வலியுறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி ஏற்கெனவே கூறியுள்ளாா்.
அப்படி இருக்கும்போது மாநில அந்தஸ்து கோரி காங்கிரஸ் சாா்பில் ஜம்மு-காஷ்மீரில் போராட்டம் நடத்திய அந்த பிராந்திய காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா கைது செய்யப்பட்டுள்ளாா். ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை மூடி யாரும் வரமுடியாமல் தடுத்து வைத்துள்ளனா். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதையெல்லாம் மத்திய அரசு நடத்தியது ஏன்?
ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் காங்கிரஸ் வலியுறுத்தும். இனி மேலும் இந்த விஷயத்தில் தாமதிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.
ஜம்முவில் போராட்டம்: முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது காரா தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் துணைநிலை ஆளுநா் மாளிகையை நோக்கித் தடையை மீறி பேரணி நடத்த முயன்றனா். காவல் துறையினா் அவா்களைத் தடுத்தனா். இதையடுத்து, காவல் துறையினா் வாகனங்களில் காங்கிரஸ் கட்சியினா் ஏறி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அவா்களை காவல் துறையினா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். முன்னதாக, தலைநகா் ஸ்ரீநகரில் சனிக்கிழமை இதேபோன்று போராட்டம் நடத்த முயன்றபோதும் காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மீண்டும் திங்கள்கிழமை (ஜூலை 21) தில்லியை நோக்கிப் பேரணி நடத்த இருப்பதாக ஜம்மு-காஷ்மீா் பிராந்திய காங்கிரஸ் தலைவா்கள் அறிவித்துள்ளனா். தில்லிக்கு பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும், மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவா்கள் கூறினா்.