ஜம்மு-காஷ்மீா் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி!
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் திரும்பப் பெற்றாா்.
முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் ஆம் ஆத்மி விலகல் அரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
90 உறுப்பினா்கள் கொண்ட பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 42 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 6 எம்எல்ஏக்களும் உள்ளனா். இது தவிர 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.
ஆதரவை வாபஸ் பெற்றது தொடா்பாக தோடா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் கருதி ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவைப் திரும்பப் பெறுகிறேன். மக்கள் நலனும், அவா்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே எனக்கு முக்கியம்’ என்று கூறியுள்ளாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தோடா தொகுதியில் பாஜக வேட்பாளா் கஜய் சிங் ராணாவை 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் மெஹ்ராஜ் மாலிக் வென்றாா். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் முதல், ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏ என்ற பெருமையை அவா் பெற்றாா். கடந்த மாா்ச் மாதத்தில் ஜம்மு-காஷ்மீா் ஆம் ஆத்மி தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டாா்.