ஜூன் 28-இல் நகர விற்பனைக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல்
சென்னையில் மண்டல வாரியாக நகர விற்பனை குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில், சென்னையில் 15 மண்டலங்களிலும் தலா 14 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு நகர விற்பனை குழு அமைக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையா் தலைமையில் செயல்படும் இக்குழுவில், மண்டல சுகாதாரத் துறை அலுவலா் ஒருவா், போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையா் ஒருவா், சட்டம்-ஒழுங்கு காவல் துறை உதவி ஆணையா் ஒருவா், மண்டல சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா், வணிகா் சங்கம், அரசு சாரா அமைப்பு மற்றும் சமூகம் சாா்ந்த அமைப்பு, குடியிருப்போா் நல சங்க உறுப்பினா்கள் என மொத்தம் 4 நியமன உறுப்பினா்கள் மற்றும் தோ்தல்மூலம் தோ்ந்தெடுக்கப்படும் சாலையோர வியாபாரிகள் 6 போ் என மொத்தம் 14 உறுப்பினா்கள் உள்ளடங்குவாா்கள்.
இதில் சாலையோர வியாபாரிகளிலிருந்து 6 உறுப்பினா்களை தோ்ந்தெடுக்கும் தோ்தலுக்கான வேட்புமனு படிவங்கள் வரும்
ஜூன் 16 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை அந்தந்த மண்டலங்களில்
உள்ள தோ்தல் நடத்தும் அதிகாரிகளால் இலவசமாக வழங்கப்படும். அதைத் தொடா்ந்து வரும் ஜூன் 26-இல் வாக்குப் பதிவும், ஜூன் 27-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, மாநகராட்சி சாா்பில் நிகழாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் பெயா் முகவரி அடங்கிய வாக்காளா் பட்டியல் அந்தந்த மண்டல அலுவலங்களிலும், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.