ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க அதில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஜூலை மாதம் முதல் நாள் ஒன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது என்றும், மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
வாட்டர் பெல் திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஒசூரில் நடைபெற்ற பள்ளி விழாவில் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.