டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு!
சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் சோதனைக்கு எதிராக மனு தாக்கல் செய்தபோது, அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்கப்பட்டும் என்று கூறியதால், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டார்.
பின்னர், டாஸ்மாஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்க்கும் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தெடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை நடந்தது பற்றி..
சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார்களுக்கு அனுமதி வழங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான், அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். இதையடுத்து வேறு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை சற்று நேரம் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியபோது, மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் தடுப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாகவும் அரசு வழக்குரைஞருக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.
அப்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை எடுத்துச் செல்வது குறித்து வழக்குரைஞர் கூறியதால், வழக்கு நிலுவையில் இருந்தபோதே, உச்ச நீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால், இந்த வழக்கை இன்று விசாரிக்க பட்டியலிட்டிருக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல், இந்த மனு பொதுமக்கள் நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்துக்காவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞர், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவே வழக்குத் தொடரப்பட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், எடுக்காவிட்டாலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வாதங்களை எடுத்துவைத்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கைத் தொடர முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.