'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?
டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!
கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்ட பொருள்கள் விற்பனை கடை உள்ளது. இங்குத் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்குச் சேர்ந்த அவர் கடையில் உள்ள பொருள்களை மினி லாரி மூலம் வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகம் செய்யும் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கி இருந்து வேலைக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அறையில் ஷியாம் டிவியில் அதிக சத்தம் வைத்துக் கொண்டு நிகழ்ச்சியைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தூங்கிக் கொண்டு இருந்த ஆறுமுகம் எழுந்து அவரிடம் சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. திடீரென சியாம் அங்குக் கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதனால் அலறிய ஆறுமுகம் அங்கேயே மயங்கி சரிந்து உள்ளார். ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் போலீஸார் மற்றும் அந்த கட்டடத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது அவர்கள் சென்று பார்த்த போது ஆறுமுகம் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்து உள்ளார். ஷியாம் உடனே அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். ஆறுமுகத்தை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 3 மணிக்கு இறந்து விட்டார். சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஷியாம் தேடி வருகிறார்கள். ஷியாம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் கேரளத்திலிருந்து இங்கு வந்து வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவர் மீது சில வழக்குகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியும் என போலீஸார் கூறினர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.