தாயகம் திரும்பிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானிலிருந்து அப்கான் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் தாங்களாகவே தங்களது நாட்டிற்கு திரும்ப பாகிஸ்தான் அரசு விதித்திருந்த காலக்கெடுவானது நேற்றுடன் (மார்ச் 31) முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள ஆப்கன் மக்கள் இன்று (ஏப் 1) முதல் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசின் வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளியான அறிக்கையில், ஆப்கன் நாட்டினர் தங்கள் தாயகம் திரும்ப விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவானது முடிவடைந்ததினால் அதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வரை பாகிஸ்தானிலிருந்து 8,78,972 ஆப்கன் மக்கள் தாங்களாகவே தங்களது நாட்டிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, பாகிஸ்தான் அரசு இஸ்லாமபாத் மற்றும் ராவல்பிண்டி நகரத்தில் சட்டவிரோதமாக குடியேறி வாழும் ஆப்கன் அகதிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து நாடு கடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள தங்களது நாட்டு மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்த வேண்டாம் என ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆப்கானிஸ்தானின் அகதிகள் மற்றும் நாடு திரும்புதல் அமைச்சர் மவ்லவி அப்துல் கபிர், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஆப்கன் மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டத்தை நிறுத்தி அவர்கள் தாங்களாகவே நாடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, இரட்டை நகரங்களில் வசிக்கும் பதிவு செய்த சான்று வைத்துள்ள ஆப்கன் நாட்டினர் வரும் ஜூன் 30-க்குள் தாங்களாகவே தங்களது தாயகம் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கன் மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் பாகிஸ்தான் அரசின் இந்தத் திட்டத்திற்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:மலேசியா எரிவாயு குழாய் வெடி விபத்து: 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!