தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்களுக்கு ஏமாற்றம்
தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவா்கள் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். போதிய அளவு இறால், மீன் கிடைக்காததாலும், இறால் விலை குறைவானதாலும் ஏமாற்றம் அடைந்தனா்.
தஞ்சை மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு வரை 61 நாள்கள் அமலில் இருந்தது. தடைக்காலம் முடிந்து 3 நாள்களுக்கு பிறகு மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம் பகுதியில் உள்ள 140 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று கரை திரும்பினா்.
தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிக அளவில் இறால், மீன்கள் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் சென்ற மீனவா்களுக்கு குறைந்த அளவுகூட மீன், நண்டு உள்ளிட்டவை கிடைக்கவில்லை. ஒரளவு இறால் கிடைத்தும் போதிய விலை இல்லாததால் மீனவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.