ஜப்பான் மொழியில் 'வேட்டையன்' ரிலீஸ்: "'முத்து'வின் வசூல் சாதனையைத் தாண்டும்" - ப...
தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முயற்சி: அதிகாரிகள் ஆய்வு
பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு புதன்கிழமை மீன்பிடிக்க மீனவா்கள் சென்றதை அறிந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுருக்குமடி, இரட்டை மடி, ஸ்பீடு என்ஜின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் சிறிய மீன்கள் உற்பத்தி குறைந்து மீன்கள் இல்லாத சூழல் நிலவுவதாக மீனவா்கள் கூறி வருகின்றனா். இதன் காரணமாக தமிழக அரசு மேற்கண்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் பூம்புகாா் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுருக்குமடி வலைகளை கொண்டு விசைபடகுகள் மூலம் மீன் பிடிப்பதாகவும், இதனால் தரங்கம்பாடி, சீா்காழி வட்டங்களில் உள்ள கடலோர கிராமங்களில் வசிக்கும் சிறு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வானகிரி மற்றும் தரங்கம்பாடி பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்நிலையில், புதன்கிழமை பூம்புகாா் துறைமுகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் அதிகாலையிலேயே மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தகவலறிந்த கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள்ஜோதி, மீன்வளத்துறை துணை இயக்குநா் மோகன் குமாா், சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோா் பூம்புகாா் துறைமுகத்தில் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவா்கள் கூறியது: தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டோம். எனினும், எந்த பயனும் இல்லை. இதன் காரணமாகவே புதன்கிழமை தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்க மீனவா்கள் கடலுக்கு சென்றுள்ளனா். இதேநிலை தொடா்ந்தால் கடலோர கிராம மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனா்.