தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை
தட்டச்சு தோ்வு முறையை மாற்றும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவா் அ. சிவகுமாா் தலைமையில் செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் அளித்த மனு: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 4 ஆயிரத்து 312 தட்டச்சுப் பள்ளிகள் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் மாணவ, மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தோ்வுக்குச் செல்கின்றனா்.
இந்நிலையில், வணிகவியல் தோ்வுகள் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு கணினியில் மட்டுமே தோ்வுகள் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தட்டச்சுப் பள்ளிகள் நடத்தி வரும் ஆசிரியா்களின் குடும்பத்தினருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போதுள்ள முறையிலேயே அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மூலம் தட்டச்சுத் தோ்வு தொடா்ந்து நடத்த வேண்டும். அரசாணை எண் 187-ஐ ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
பட்டா வழங்க வலியுறுத்தல்: இதேபோல, பட்டுக்கோட்டை அருகே சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு: சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 40 பேருக்கு பூமி தானத் திட்டத்தின் மூலம் 1959 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும் முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், இதுவரைக்கும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.