"தமிழக மக்கள் கட்சிகளின் செயலைத்தான் பார்ப்பார்கள்; பணத்தை அல்ல” - விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பதில்
விருதுநகரில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஞானசேகரன் வழக்கை நடத்திய சட்டத்துறை, நீதித்துறைக்குப் பாராட்டுக்கள். கடுமையான தண்டனையை விதித்திருக்கும் நீதித்துறை, பெண்களின் பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
டெல்லி யமுனை ஆற்றங்கரையில் மதராசா காலனி பல ஆண்டுகளாக உள்ளது.

பா.ஜ.க அரசு அமைந்த பிறகு தற்போது அவசர அவசரமாக இடிப்பதற்கான வேலையைச் செய்து வருகிறது. பா.ஜ.க தமிழர் விரோத அரசுதான் என்பதை மறுபடியும் காட்டியுள்ளது.
வரும் 2026 தேர்தலில் திராவிடக் கட்சிகள் பணத்தை லாரி லாரியாக கொட்ட இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்திருப்பது, புதிதாக கட்சி தொடங்குபவர்களும், எதிர்க்கட்சிகளாக இருப்பவர்களும் கூறும் வாதம். தமிழின மக்களைப் பணத்திற்கு விலை போகும் நபர்கள் போல விஜய் பேசியிருப்பது நியாயமல்ல.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால், தமிழக மக்கள் எதிர்த்து வாக்களித்தனர். மக்களின் மனம் செயல்பாட்டில் இருக்கிறதே தவிரப் பணத்தில் இல்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.

முதல்வரின் பல நல்ல திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருப்பதால் அதனைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்.
இந்தியா முழுவதும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. வந்தே பாரத் கதை பேசி வருகிறார்கள். சாமானியர்கள் பயன்படுத்திய ரயில்வேயை தற்போது பணக்காரர்களுக்கான ரயில்வேயாக மாற்றி வருகிறார்கள்” என்றார்.