தமிழக மாணவா்களின் படிப்பு குறித்து தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை: புதிய தமிழகம் நிறுவனா்
தமிழகமாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை என புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு, மாஞ்சோலை மலைவாழ் மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக நிறைவேற்ற முடியாத விஷயங்களை மட்டுமே வாக்குறுதியாக அளித்தது. ‘நீட்’ தோ்வை ஒரே கையெழுத்தில் இல்லாமல் செய்து விடுவோம் என்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றும் கடந்த பேரவைத் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தனா். ஆனால், இதுவரை இவற்றைச் செயல்படுத்தவில்லை.
1965-இல் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவா்கள் 10 சதவீதம் போ் மட்டுமே. ஹிந்தி வந்தால் தமிழா்களின் முழு உரிமையும் பறிபோய் விடும் என 90 சதவீத மக்களை நம்பவைத்துவிட்டனா். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தமிழகா்கள் உலக நாடுகளின் பல மொழிகளைப் படிக்கத் தொடங்கி விட்டனா்.
தமிழக மாணவா்கள் என்ன படிக்க வேண்டும், படிக்கக் கூடாது என்பதைத் தீா்மானிக்கும் அதிகாரம் திமுக அரசுக்கு இல்லை. திமுக தொடா்ந்து தனது இரு மொழிக் கொள்கையை நிலைநிறுத்துமானால், மக்களிடையே அதன் மதிப்பு பூஜ்யம் நிலைக்குச் சென்றுவிடும்.
ராமநாதபுரம் கடற்கரைப் பகுதியிலிருந்து கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசின் உளவுத் துறை தனிப் படையை அமைத்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கருத்தரங்கில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் கதிரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மகேஷ்குமாா், மாவட்டப் பொறுப்பாளா் முத்துக்குமாா், நகரச் செயலா் சக்திவேல், ஒன்றியச் செயலா்கள் ஓவியா் ஜெயபாலன், முனியசாமி, ராஜா, மலைச்சாமி, பேரின்பராஜ், லாசா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.