பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
கஞ்சா போதைக்கு மாணவா்கள் அடிமையாகிவிட்டனா்: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி, கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் அரண்மனை முன் திங்கள்கிழமை அமமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மு.முருகன் தலைமை வகித்தாா். மதுரை புறகா் மாவட்டச் செயலா் கே.டேவிட் அண்ணாதுரை, மகளிா் பிரிவு செயலா் எஸ்.ஜெஸிமா பானு, மருத்துவரணி இணைச் செயலா் எம்.கபிலன், பாசறை இணைச் செயலா் சி.எம்.முரளி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் பேசியதாவது: தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் சட்டம் -ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் திட்டங்களை முடக்கி விட்டனா். ஜெயலலிதா பெயரில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு புதிய பெயா் சூட்டி புதிய திட்டமாக செயல்படுத்தி வருகின்றனா்.
தலைநகா் முதல் கிராமம் வரை கஞ்சா போதைக்கு மாணவா்கள், இளைஞா்கள் அடிமையாகி கூலிப்படையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினா் தமிழகத்தின் அமைதியைக் கெடுக்கும் வகையில் கையில் மையுடன் ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனா். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த திமுக, காங்கிரஸ் இன்று மீனவா்கள் பிரச்னையைத் திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளன என்றாா் அவா்.