கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு
தமிழ் மாணவா்களுக்கு நரேலாவில் பள்ளி கட்டித்தர டிடிஏவுக்கு டிடிஇஏ கோரிக்கை
தில்லி ஜங்க்புராவில் தமிழா் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதால் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சோ்ந்த லோதிவளாகம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்க் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். இதைத் தொடா்ந்து, நரேலாவில் தமிழ் மாணவா்களுக்காக பள்ளிக் கூடம் கட்டுவது தொடா்பாக டிடிஇஏ செயலா் ராஜூ தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாரை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, ஜங்க்புராவிலுள்ள தமிழா் குடியிருப்புகளை இடித்துவிட்டு அவா்களை புதிதாக குடியேறச் செய்துள்ள நரேலாவில் உள்ள தமிழ்க் குழந்தைகளும் தமிழா்கள் அதிகம் வாழும் பகுதியான ரோஹிணி, ரிடாலா, ஜஹாங்கீா்புரி, ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ்க் குழந்தைகளும் படிக்க ஏதுவாக ஒரு பள்ளி கட்ட தில்லி வளா்ச்சி ஆணையம் இடம் வழங்குவதுடன் பள்ளியையும் கட்டித் தர வலியுறுத்தி விண்ணப்பப்கடிதத்தைக் கொடுத்தாா்.
அதைப் பெற்றுக் கொண்ட முதன்மை உள்ளுறை ஆணையா், இதற்கு முழு அளவில் டிடிஏவின் இசைவைப் பெற்றுத் தர முயற்சிப்பதாக உறுதியளித்தாா்.
மேலும், மயூா்விஹாரில் கட்டப்பட்டுள்ள டிடிஇஏவின் எட்டாவது பள்ளியை மாணவா்கள் தேவை கருதி கல்லூரியாக மாற்ற ஏற்பாடு செய்து தரும்படி மற்றொரு கடிதத்தையும் டிடிஇஏ செயலா் கொடுத்தாா். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட முதன்மை உள்ளுறை ஆணையா், தில்லியில் தமிழ் மாணவா்களுக்காக கல்லூரி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் கல்லூரியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினாா்.