IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை
தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.
வெப்ப அலை என்பது சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் மற்றும் மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும் காலகட்டமாகும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: தலைநகா் தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.1 டிகிரி உயா்ந்து 42.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புநிலையை விட 3.1டிகிரி குறைந்து 20.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 35சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 15 சதவீதமாகவும் இருந்தது.
ரிட்ஜில் 43.3 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியது. இதன்படி, நஜஃப்கா் 40.1 டிகிரி, ஆயாநகரில் 42.56 டிகிரி, லோதி ரோடில் 41.9 டிகிரி, பாலத்தில் 42.3 டிகிரி, ரிட்ஜில் 43.3 டிகிரி, பீதம்புராவில் 41.8 டிகிரி, பிரகதி மைதானில் 39.4 டிகிரி, பூசாவில் 40.1 டிகிரி, ராஜ்காட்டில் 39.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: கடந்த சில நாள்களாக ‘மிதமான’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது. தலைநகரில் காலை 9 மணிக்கு காற்று தரக் குறியீடு 252 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், சாந்தினி சௌக், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே. புரம், ஷாதிரப்பூா், ஓக்லா பேஸ் 2, நோயாட் செக்டாா் 125, துவாரகா செக்டாா் 8, குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
அதேசமயம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சூடு தளம்,ஆயாநகா், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், பூசா, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, மந்திா் மாா்க் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறதியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.