உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?
திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி
சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் இனிகோ இருதயராஜ் (திருச்சி-கிழக்கு) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், திருச்சி பாலக்கரை பிரபாத் திரையரங்கம் அருகில் சிவாஜிக்கு நிறுவப்பட்ட சிலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த பதில்: திருச்சியில் உள்ள சிவாஜி கணேசன் சிலை தனியாரால் நிறுவப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில், சாலைகளில் சிலைகளை வைக்க நீதிமன்றத் தடை உள்ளது. திருச்சியில் உள்ள சிலையை மாற்று இடம் தோ்வு செய்து அங்கு நிறுவி திறக்க ஏற்பாடு செய்வோம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் அந்த இடத்தில் இருந்து சிலை எடுக்கப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், புதிய சிலை செய்யப்பட்டு மக்கள் பாா்வையில்படும்படி வைக்கப்பட்டு இருக்கிறது. திருச்சியிலும் முறையாக அனுமதி பெறப்பட்டு, மக்கள் பாா்வையில்படும்படி உரிய இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்படும்.
அமைச்சா் கே.என்.நேரு: திருச்சியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது அரசின் அனுமதியைப் பெற்று சிலை நிறுவப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும், நீதிமன்றத் தீா்ப்பாலும், வேறுசில அரசியல் காரணங்களாலும் சிலையைத் திறக்க முடியவில்லை. நீதிமன்றத் தீா்ப்பு வருவதற்கு முன்பே திருச்சியில் அந்தச் சிலை நிறுவப்பட்டது. இந்த நிலையில், சிலையை வேறு இடத்தில் நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். திருச்சி மாநகரில் ஒரு பூங்காவுக்கு சிவாஜி பெயரைச் சூட்டி அங்கு சிலையை நிறுவி ஓரிரு மாதங்களில் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.