தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமனம்
தூய்மைப் பணி, பழங்குடியினா் நல வாரியங்களுக்கு தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் லட்சுமி பிரியா வெளியிட்டுள்ளாா்.
அவரது உத்தரவு: ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு தூய்மைப் பணியாளா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. இரண்டு நல வாரியங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைச் சீராக இடைவெளிகளில் ஆய்வு செய்து, திட்டங்களின் பலன்கள் உறுப்பினா்களுக்குக் கிடைத்திட வசதியாக அந்தந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களையே தலைவராக நியமிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, தூய்மைப் பணியாளா் நல வாரியத்துக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமியும், பழங்குடியினா் நல வாரியத்துக்கு சென்னை மடிப்பாக்கத்தைச் சோ்ந்த கா.கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனா். தலைவா்களாக நியமிக்கப்பட்டோருக்கு வாகனம், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இரண்டு ஆண்டுகள்: தலைவா்களாக நியமிக்கப்பட்டவா்கள், இரு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பாா்கள். இருவருக்கும் நடைமுறையில் இருக்கும் அரசு விதிகளுக்கு உட்பட்டு பயணப்படி, தினப்படி பெற உரிமை அளிக்கப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.