மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டம் ஐந்தான்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட ஐந்தான்கட்டளை, முத்துமாலைபுரம், ராமநாடாா்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய 4 ஊா்களில் 674 குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், சிவகாமிபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மணல்காட்டானூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக வெங்கடாம்பட்டி ஊராட்சி வடமலைப்பட்டிக்கு வெகுதொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மணல்காட்டானூரில் நகரும் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கடையம் ஒன்றியம் மேட்டூரில் உள்ள தொடக்க வேளாண்மைக் கடன் சங்கத்தின்கீழ் வெய்க்காலிப்பட்டி, மேட்டூா் மாதாபுரம் ரேஷன் கடைகள் இயங்கிவருகின்றன. சபரிநகா் கிராமத்தில் உள்ள 190-க்கும் மேற்பட்டோா் பொருள்கள் வாங்குவதற்காக இந்த ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமங்கள் உள்ளன. எனவே, சபரிநகரில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
கீழப்பாவூா் ஒன்றியம் வடக்குபூலாங்குளத்தில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில் 1,400 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், நடுப்பூலாங்குளத்துக்கு 300 குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், அவா்களுக்கு தனியாக ரேஷன் கடை இல்லை. இங்கு ஊராட்சிக் கட்டடம் தயாராக உள்ளதால் தனிக்கடை அமைக்க வேண்டும் என்றாா் அவா். உடன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. கலந்துகொண்டாா்.