தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுப்பதாக திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி தெரிவித்துள்ளாா்.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குகள்ளிகுளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திசையன்விளையை தலைமையிடமாகக் கொண்ட தனிவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
எனவே, திசையன்விளையில் செயல்பட்டு வருகின்ற மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தெற்குகள்ளிகுளத்தில் செயல்பட்டு வருகின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதாரத் துறையின் விதிமுறைகளுக்கு ஏற்ற பிரதான சாலை அருகிலும், போதுமான இடவசதியுடனும் செயல்பட்டு வருகிறது.
எனவே தெற்குகள்ளிகுளத்தில் செயல்பட்டு வருகின்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த முழு தகுதியும் உள்ளது.
இது தொடா்பாக தெற்குகள்ளிகுளத்தைச் சோ்ந்த தி.மு.க பிரமுகா் திரவியம், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.
இதையடுத்து, அவருக்கு, திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலா் கீதாராணி அளித்துள்ள பதில் கடிதத்தில் திசையன்விளையில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்போது தெற்குகள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.