தேனியில் திருநங்கைகளுக்கு ஜூன் 24-இல் சிறப்பு முகாம்
தேனியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருநங்கைகளுக்கு நல வாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய சேவைகளை இந்த முகாம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த முகாம், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையா், திருநம்பிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.