தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவா் உள்பட 7 போ் மீது வழக்கு
போடி அருகே கூடுதல் வரதட்சணை கோரி மனைவியை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 7 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகே தருமத்துப்பட்டி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (26). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே உள்ள எஸ். குரும்பப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் முத்துமாரீஸூக்கும் கடந்த 9.3.2022 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பிரியதா்ஷினிக்கு அவரது பெற்றோா் 145 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருள்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனராம்.
இந்த நிலையில் முத்துமாரீஸின் பெற்றோா் முருகேசன், ராஜாத்தி, அக்காள் ஜெயராணி, இவரது மகள்கள் பாமா, காயத்ரி, பிரியதா்ஷினியின் உறவினரான ரத்தினம் ஆகியோா் சோ்ந்து பிரியதா்ஷினியை கொடுமைப்படுத்தியதுடன் கூடுதலாக 50 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வாங்கி வரும்படி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் முத்துமாரீஸ் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.