``தேவைப்படும்போது வீட்டுக்கே வந்து அழைப்பார்கள்" 2015-ல் பயிற்சியாளரிடம் ரிஷப் பண்ட் சொன்ன பதில்
இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியிருந்தார்.
அடுத்த போட்டி ஜூலை 2-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் 2015-ல் டெல்லி ரஞ்சி அணியில் இடம்பிடிப்பதற்கு கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் டெல்லி அணியின் பயிற்சியாளரிடம் அவர் கூறியது குறித்து, அந்தப் பயிற்சியாளரே பேசியிருக்கிறார்.

அன்று நடந்த நிகழ்வை விவரித்த டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஜய் ஜடேஜா, "எங்கள் இருவரின் முதல் சந்திப்பை நான் மறக்கவே மாட்டேன்.
2015-ல் டெல்லி அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து நான் விலகுவதற்கு முன், தேர்வுக்குழுவினரும், கேப்டனும் அணிக்கு யார் யார் வேண்டும் என்று ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர். அதில், பண்ட் தேர்வு செய்யப்படவில்லை.
இருப்பினும், ரஞ்சி டிராபிக்கான பயிற்சியில் கலந்துகொள்ளமாறு பண்ட்டிடம் சொன்னேன். `எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தேர்வுசெய்யப்படவில்லை என்பது ஒரு விஷயமல்ல' என்றேன்.
அதற்கு அவர், "அது இருக்கட்டும், அவர்களுக்கு நான் தேவைப்படும்போது என்னை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்வார்கள்" என்று என்னிடம் கூறினார்" என விவரித்தார்.

அதே ரஞ்சி சீசனில் மேற்கு வங்கத்துக்கான எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பண்ட்டுக்கு கிடைத்தது.
முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த பண்ட் இதுவரை மொத்தமாக 70 முதல்தர போட்டிகளில் ஒரு முச்சதம் உள்பட 47 ஆவரேஜில் 5,138 ரன்களை பண்ட் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.