அதிமுக: "இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை...’’ - ஸ்டாலின் கா...
"தவறான நண்பர்கள்; குடும்பப் பிரச்னை; அப்பாவின் வார்த்தை..." - தன்னிலை உணர்ந்து வருந்தும் பிரித்வி
இந்திய கிரிக்கெட்டில் சேவாக்கை போல ஒரு முத்திரை பதிப்பார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா.
2018-ல் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரித்வி ஷாவுக்கு அதே ஆண்டில் வெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பி.சி.சி.ஐ-யிடமிருந்து அழைப்பு வந்தது.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய இவர், அதே ஆண்டு ஐ.பி.எல்லில் ரூ. 1.2 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்
2022-ம் ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் ரூ. 7.5 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்டார்.

ஆனால், இன்று அவரின் நிலைமையே வேறு. 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
ஒருநாள் போட்டியில் கடைசியாக 2021-ல் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடினார்.
அதே சுற்றுப்பயணத்தில் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியிருந்தார். கடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் அன்சோல்ட்.
கடந்த ரஞ்சி சீசனில் மும்பை அணியின் பிளெயிங் லெவனில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார்.
இப்போது ரஞ்சியில் மும்பை அணியிடமிருந்து தாமாக NOC கேட்டுப் பெற்று அந்த அணியிலிருந்து வெளியேறியிருக்கிறார்
அடுத்து எந்த அணியில் இணைவார் என்ற எந்த அறிவிப்பும் அவர் தரப்பிலிருந்து இல்லை.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இவரின் தலைமையில் துணைக் கேப்டனாக விளையாடிய கில் இன்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகிவிட்டார்.

அதேபோல், அர்ஷதீப் சிங் 2024 டி20 உலகக் கோப்பையில் முக்கிய பவுலராக இருந்தார். தற்போது, இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வாகியிருக்கிறார்.
ஆனால், பிரித்வி ஷா தற்போது இந்திய தேர்வுக்குழுவின் ரேடாரிலேயே இல்லை.
ஃபிட்னஸ் இல்லாதது, உள்ளூர் போட்டிகளில் இன்கன்சிஸ்டண்ட் ஃபெர்பாமென்ஸ், மும்பை கிரிக்கெட் வாரியத்தில் மோதல் என பல்வேறு பேச்சு இவர்மீது அடிபடுகிறது.
இந்த நிலையில், தன்னுடைய இத்தகைய நிலைமை குறித்து முதல்முறையாக பிரித்வி ஷா மனம் திறந்திருக்கிறார்.
நியூஸ்24 ஸ்போர்ட்ஸ் (News24 Sports) ஊடகத்துடன் பேசிய பிரித்வி ஷா பேசுகையில்...
தவறான நண்பர்கள்...!
"நிறைய நடந்துவிட்டது. இதில் மக்களின் பார்வையே வேறு.
ஆனால், என்ன நடந்தது என்பதை என்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
வாழ்வில் நிறைய நிறைய தவறான முடிவுகளை நான் எடுத்தேன். கிரிக்கெட்டுக்கு குறைந்த நேரம் செலவிட்டேன்.
முன்பு நான்கைந்து மணிநேரம் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டேன். பேட்டிங்கில் சோர்வடைந்ததே இல்லை.
பாதி நாளை மைதானத்திலேயே கழிப்பேன். இவையனைத்தும் 2023 வரை நடந்தது.

அதன்பிறகு, எதுவெல்லாம் முக்கியமில்லையோ அதையெல்லாம் முக்கியமான விஷயங்களாக எடுத்துக்கொண்டேன்.
தவறான நண்பர்களை நான் உருவாக்கிக்கொண்டேன். அங்கு செல்வது, இங்கு செல்வது எனத் தடம் மாறியது.
முன்பு 8 மணிநேரம் மைதானத்தில் இருப்பேன். பின்னர் அது 4 மணிநேரமாகக் குறைந்தது.
அப்பாவின் அந்த வார்த்தை..!
குடும்பப் பிரச்னைகள் சில இருந்தது. எனக்கு நெருக்கமான என் தாத்தா இறந்துவிட்டார்.
எல்லா தவறும் என்னுடையதுதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், என் அப்பா எப்போதும் என்னை ஆதரித்தார். எனக்கு நல்லது எது கேட்டது எது எனப் பார்த்தார்.
எல்லோருடைய வாழ்விலும் ஏற்றத் தாழ்வு இருக்கும். இது எனக்கு ஒரு பாடம்.

என் அப்பா என்னிடம் சொன்னார், `பிரித்வி ஷாவை பிரித்வி ஷாவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும்' என்று. இப்போது எல்லாவற்றையும் நான் விட்டுவிட்டேன்.
மக்களுக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால், எனது வீட்டில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.
நான் வீட்டில் தனியாக வசிக்கிறேன். அப்பா மட்டும் தொடர்ந்து வருவார். அது எனக்குப் பிடிக்கும்.
இப்போதெல்லாம் வெளியில் செல்வதையே நான் வெறுக்கிறேன்." என்று கூறினார்.
நானே பொறுப்பு... யாரையும் குறைசொல்லப்போவதில்லை!
மேலும், தவறான நண்பர்களை உருவாக்கிக்கொண்டதற்கு தன்மீதே பழிபோட்டுக்கொண்ட பிரித்வி ஷா, "அது அவர்களின் தவறல்ல, நான்தான் தவறு. எனக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால், மனவோட்டத்தில் அது நடந்துவிட்டது. இது எனது வாழ்வில் என்னுடைய கவனச்சிதறல் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

நீங்கள் என்னைத் திரையில் பார்க்காத நேரத்தில் என்னுடன் இருந்தவர்கள், என்னைத் திசைதிருப்பியவர்கள் யாரும் இப்போது என்னுடன் இல்லை.
அதை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொள்கிறேன். என் பாதையை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
எனவே, யாரையும் நான் குறைசொல்லப்போவதில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு.
இப்போது எனக்கு நானே பலமாக இருக்கிறேன். மனதளவில் நான் வலிமையானவன்." என்று கூறினார்.