‘காந்தி கண்ணாடி’ - ஹீரோவாக சின்னதிரை நடிகர் பாலா! விடியோவில் இதையெல்லாம் கவனித்த...
``நடிகர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து
திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதை வழங்குவதற்குக் கலைஞர்கள், திரைப்படங்கள் தேர்வு செய்யப்படுவதைப்போல, ஆண்டுதோறும் அந்த விருதை யாருக்கு, எந்தப் படைப்பிற்கு வழங்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் தேர்வுக் குழுவினரும் தேர்வு செய்யப்படுவர்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்வுக் குழுவில் நடிகர் கமல் ஹாசனும் பங்கேற்கிறார். அதனால் கமல் ஹாசனுக்குத் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்ம பூஷண் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மதிப்புமிக்க TheAcademy விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 60 ஆண்டுகளாக நீடித்த ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட கமல்ஹாசன், ஒரு நடிகரை விட மேலானவர்.
கமல்ஹாசன் ஒரு நடிகர், கதைசொல்லி, இயக்குநர் என அவரது திரைத்துறையின் ஆற்றலும், பல்துறை திறமையும், பல தசாப்த கால அனுபவமும், இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் எனத் திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது ஆளுமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

அவருக்கு நான் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.