பயிா்க் கடன்களுக்கான தொகையை நபாா்டு வழங்கி ரூ.4,290 கோடியாக மீண்டும் உயா்த்தி வழ...
`அப்பா பாஜக மத்திய அமைச்சர் என்பதால் எனக்கெதிராக...' - சுரேஷ் கோபியின் மகன் ஆதங்கம்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக உள்ளார். அவரது மகன் மாதவ் சுரேஷ் சினிமாக்களில் நடித்துவருகிறார். சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்துள்ள ஜானகி வி/எஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா என்ற சினிமாவிலும் மாதவ் சுரேஷ் நடித்துள்ளார். இதற்கிடையெர் படைக்களம் என்ற சினிமாவில் நடிகர் சந்தீப்-பின் நடிப்பு குறித்த சில முகநூல் பதிவுக்கு, கருத்துச் சொல்லப்போய் நெட்டிசன்களின் விமர்சன புயலில் மாட்டியுள்ளார் மாதவ் சுரேஷ். இது குறித்து மாதவ் சுரேஷ் கூறுகையில், ``படைக்களம் என்ற சினிமாவில் சந்தீப்-பின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தீப்பின் கதாபாத்திரத்தில் மாதவ் சுரேஷ் நடித்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என இரண்டு மூன்று ஃபேஸ்புக் பேஜ்களில் பதிவு போட்டிருந்தார்கள். சந்தீப் ஈடுபாட்டுடன் செய்த வேலைக்கு ஃபேஸ்புக்கில் அவமரியாதை செய்திருப்பதாகத்தான் நான் அதை கருதினேன். ஒரு நடிகரை பாராட்டவோ விமர்சிக்கவோ செய்யுங்கள். ஆனால் ஒப்பீடு செய்யாதீர்கள்.

அதுபோன்ற ஒருபதிவை நான் ஷேர்செய்து அதுபற்றி கருத்து தெரிவித்திருந்தேன். அதற்குள் சிலர், நீங்கள் உங்களுக்கே விளம்பரம் செய்துகொள்ளாதீர்கள் என கமெண்ட் போடுகிறார்கள். சந்தீப்பின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது என நீங்கள் பாராட்டலாம் அல்லது விமர்சிக்கலாம். ஆனால் ஒப்பீடு செய்யாதீர்கள் என்று தான் நான் கூறியிருந்தேன். ஆனால் எனக்கு எதிராக பல விமர்சன கமெண்ட்டுகள் வருவதற்கு என் அப்பா சுரேஷ் கோபி பா.ஜ.க மத்திய அமைச்சராக இருப்பதுதான் காரணம். என் அப்பா மத்திய அமைச்சராக இருப்பதை பலராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் எனக்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் வருகின்றன. என்னை ட்ரோல் செய்பவர்கள் மீது கோபம் இல்லை.

ஹோல்ப் ஜி.டி.ஐ (GOLF GTI) கார் நான் வாங்கியுள்ளேன். கேரளாவில் அதன்விலை 67 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். நான் கார் வாங்கியது பற்றி சிலர் விமர்சிக்கிறார்கள். அப்பா வாங்கிய காரா, மகன் வாங்கியதா எனவும், சொந்த பணத்தில் வாங்கினால் நன்றாக இருந்திருக்கும் எனவும் விமர்சிக்கிறார்கள். எனது பெயரில் லோன் எடுத்துதான் அந்த காரை வாங்கி உள்ளேன். நான் வேலைசெய்துதான் லோன் செலுத்த வேண்டும். அப்பா சம்பாதிக்கும் பணம் அப்பா, அம்மாவுக்கு ஓய்வு காலத்திற்கும், சகோதரிகளை திருமணம் செய்துகொடுப்பதற்கும் பயன்படும். சுரேஷ் கோபியின் மகன் என்ற பெருமை எனக்கு இருந்தாலும், வேலை செய்து, சொந்தகாலில் வாழ்வதற்கு விரும்புகிறேன்" என்றார்.