110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.15 கோடி நலத் திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கி...
நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...
மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.
அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை மே 23 ஆம் தேதி கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் ராஜ் குஷ்வாஹாவை கொலை செய்துள்ளனர். சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார்.
சோனம் ரகுவன்ஷியை உத்தர பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்திய பிரதேசத்திலும் மேகாலயா போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேகாலயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதன்கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில், விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்களை சோனம் மற்றும் குற்றவாளிகள் வாக்குமூலமாக அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷில்லாங் காவல் கண்காணிப்பாளர் விவேக் சியம் தெரிவித்ததாவது:
“இந்த கொலைக்கு ராஜ் மூளையாக செயல்பட்டுள்ளார், அவருடன் இணைந்து சோனம் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். இது கூலிப்படை செய்த கொலை அல்ல. கொலையை செய்த மூவரும் நண்பர்கள், அவர்களில் ஒருவர் ராஜின் உறவினர்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு முறையும் ஷில்லாங்கில் ஒரு முறையும், கிழக்கு காசி மலையில் ஒரு முறையும் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அந்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், வெய் சவ்டோங் அருகே மே 23 பிற்பகல் 2 மணிமுதல் 2.18 மணிக்குள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்தூரில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே, அதாவது ராஜா ரகுவன்ஷியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே அவரை எப்படி கொலை செய்ய வேண்டும்? கொலைக்கு பிறகு சோனம் காணாமல் போனதுபோல் எப்படி நாடகமாட வேண்டும்? போன்ற திட்டங்களை தீட்டியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.