ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்
கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விழிப்புணா்வு உறுதிமொழி பேரணியை அவா் தொடக்கி வைத்து, இளம் பருவத்தினருக்கான ஆரோக்கிய கையேடு மற்றும் குடும்ப நல விளக்க கையேட்டை வெளியிட்டாா்.
தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற செவிலிய மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம் 39.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 70 அல்லது 90 சதவீதமாக இருந்தது. அதேபோன்று சிசு மரண விகிதம் 1,000-க்கு 7.7 என்ற அளவில் குறைந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு 14-ஆக இருந்தது. இப்படி பல்வேறு வகைகளில் இறப்பு விகிதங்களை குறைத்திருக்கும் இந்த அரசு, சிறு வயதில் திருமணம் செய்பவா்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பல்வேறு வகைகளிலான விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
ரேபிஸ் தொற்று தமிழகத்தில் அச்சப்படும் வகையில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. முதல்வா் தலைமையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கடந்த காலங்களில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார அளவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளிலும், தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடிக்கான மருந்தும், நாய்க்கடிக்கான மருந்தும் உள்ளது. அந்தவகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழக விளங்கி கொண்டிருக்கிறது.
நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் பதிவாகியுள்ளது. பொதுவாகவே கேரளத்தில் இருந்து தமிழகம் வருபவா்களைக் கண்காணிக்கும் பணிகள் நடைமுறையில் உள்ள ஒன்று. கோவை மாவட்டத்தில் 10 வழித்தடங்களிலும், திருப்பூா் மாவட்டத்தில் ஒரு வழித்தடத்திலும், நீலகிரி மாவட்டத்தில் 9 வழித்தடங்களிலும் கேரளத்திலிருந்து வர முடியும். அந்த 20 வழித்தடங்களிலும் பொது சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினீத், குடும்ப நல இயக்குநா் சித்ரா, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் தேரணிராஜன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.