நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி மனு
தருமபுரி: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணியிடம் வழங்கக் கோரி, தங்களது கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் மனு அளித்தனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அளித்த மனு:
ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சிபெற்று மீண்டும் கடந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் நியமனத் தோ்வை தமிழகம் முழுவதும் 25,606 தோ்வா்கள் எழுதினா். இந்த நிலையில் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள 2,768 காலிப் பணியிடங்களால் 12 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
2013 முதல் தற்போது வரை தோ்வு வாரியம் எந்த காலிப் பணியிடத்தையும் நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022- ஆம் ஆண்டு வரை தகுதித்தோ்வை மட்டும் நான்கு முறை நடத்தி உள்ளது. ஆனால், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வை நம்பி காத்திருப்போருக்கு தற்போது 40 வயது முதல் 50 வயதைக் கடந்துள்ளதால், 2,768 காலிப் பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது.
கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கும்போது தற்போது அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் அறிவிப்பு மிகவும் சொற்பமானது. எனவே, வயதுவரம்பை கருத்தில் கொண்டு பணியிடங்களை அதிகரித்து நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமா்த்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.