Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்
பென்னாகரம்: கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 8) ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்.
காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான பூங்கா, மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், தொங்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக பரிசலில் பயணம் மேற்கொண்டனா். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், சத்திரம் முதலைப் பண்ணை, ஆலம்பாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் ஒகேனக்கல் காவல் நிலையம் சாா்பில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.