நீலகிரி: பறிபோன மனித உயிர்கள்; கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை; என்ன நடக்கிறது கூடலூரில்?
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே யானை - மனித எதிர்கொள்ளல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்து வருகின்றன.
கூடலூர் வனக்கோட்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 மனித உயிர்கள் பறிபோகும் துயரம் தொடர்ந்து வருகின்றன.
அதேவேளையில் மின்சாரம் பாய்ச்சியும், திறந்தவெளி குழிகளில் விழுந்தும் யானைகள் உயிரிழந்து வருகின்றன.
குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் நடமாடி வரும் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறியும் எதிர்கொள்ளல்கள் நிகழ்ந்து வருகின்றன.
பந்தலூர் அருகில் உள்ள நெல்லியாளம் பகுதியைச் சேர்ந்த ஜோய் என்பவர் கடந்த 8-ம் தேதி யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தேவர் சோலை பேபி நகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரைக் கடந்த புதன்கிழமை இரவு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்தடுத்து இரண்டு மனித உயிர்கள் பறிபோனதைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகளை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து இரண்டு கும்கி யானைகளை கூடலூர் வனக்கோட்டத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது வனத்துறை.
இது குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "மக்களின் கோரிக்கையை ஏற்று ஜம்பு, கிருஷ்ணா ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
பாட்டவயல் முதல் பிதர்காடு வரையிலான பகுதியில் யானைகளின் நடமாட்டம் குறித்துக் கண்காணித்து வருகிறோம்.

குடியிருப்புகள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வரும் யானைக் கூட்டத்தை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
யானைகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் " என்றனர்.