3BHK: "இந்த காலத்தில் சொந்த வீடு எதற்கு என்று நினைத்தேன்; ஆனால்..." - நடிகர் சரத...
நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த மகன்
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மகன், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரது மகன் சரியாகப் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே, மாரியப்பன் அடிக்கடி மகனிடம் நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்திக் கண்டித்து வந்தார். மாரியப்பன் நேற்று வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டு இரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தார்.
அப்போது அவர் மகனிடம், ‘‘ஒழுங்காகப் படிக்கும் வேலையை மட்டும் பார், மற்றவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டுப் படிப்பில் முழு கவனம் செலுத்து” என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பிறகுத் தூங்கச் சென்றனர்.
மாரியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் படுத்துத் தூங்கினார். வீட்டின் வெளியே ஆடுகளைக் கயிற்றில் கட்டுவதற்காக வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பனின் தலையில் போட்டார் அவரது மகன்.

இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டுக் கண்விழித்ததும் அவரது மகன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.