நெல்லை கார் விபத்தில் 7 பேர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!
நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் மாரியப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் தளபதிசமுத்திரம் பகுதி-1 கிராமம், கீழூர் வீரநங்கை அம்மன் கோவில் அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (27.4.2025) மாலை சுமார் 5 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த TN72 BP 2351 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த TN02 AX 0321 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (வயது 68) த/பெ.பாலையா, மார்கரெட் மேரி (வயது 60) க/பெ.தனிஸ்லாஸ், ஜோபர்ட் (வயது 40) த/பெ.தனிஸ்லாஸ், அமுதா (வயது 35) க/பெ.ஜோபர்ட், குழந்தைகள் ஜோபினா (வயது 8), ஜோகன் (வயது 2) மற்றும் இராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (வயது 60) த/பெ.ஜேசு ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணவேனி (வயது 36), அன்பரசி (வயது 32), பிரியதர்ஷினி (வயது 23), சுபி.சந்தோஷ் (வயது 21), அட்சயாதேவி (வயது 19), பிரவீன் (வயது 10) மற்றும் அஸ்வின் (வயது 8) ஆகிய 7 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.