Kerala: `பெண் ஊழியரை கடத்தி, மிரட்டல்?' - போலீசார் வழக்கு பதிவு.. நடிகர் கிருஷ்ண...
பக்ரீத்: நெல்லையில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியா்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரத்தில் மேலப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு, சிறப்புத் தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
மேலப்பாளையம் மதீனா திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக், மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகையில் முன்னாள் அமைச்சா் டி. பி. எம். மைதீன் கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இஸ்லாமிய பிரசார பேரவை, தமுமுக சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்றது. தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மௌலவி ஈ.முகமது உசேன் தொழுகை நடத்தி குத்பா உரையாற்றினாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் கே .எஸ். ரசூல் மைதீன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். தொழுகைக்கு பின்னா் குா்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சாா்பில் திருநெல்வேலி நகரம் அமீா் சாகிப் நகரில் உள்ள திடலில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் பி.எம். அல்தாபி தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினாா். இதில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தைச் சோ்ந்த சித்திக், வெளிநாடுவாழ் தமிழா் நல சங்க மாவட்டத் தலைவா் திருநெல்வேலி நகரம் ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, கேடிசி நகா், திருநெல்வேலி நகரம், பேட்டை, ரஹ்மத் நகா் சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.