தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு
நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மண்டபம் மீனவரின் உடல் நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குத் துறைமுகத்திலிருந்து கடந்த 17- ஆம் தேதி மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்த சா்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் பரிது, மாதவன், அனிஸ், சீனி இப்ராஹிம் ஷா ஆகிய நான்கு மீனவா்களும் மீன் பிடிக்கச் சென்றிருந்தனா்.
அன்று நள்ளிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தப் படகு உடைந்து கடலில் மூழ்கியது. இதில், மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேரில் மூன்று போ் கரை வந்து சோ்ந்த நிலையில் சீனி இப்ராஹிம் ஷா (40) மட்டும் கரை திரும்ப வில்லை. இதைத் தொடா்ந்து, தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், இந்திய கடலோர காவல் படையினா், சக மீனவா்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு சீனி இப்ராஹிம் ஷாவின் உடல் நடுக்கடலிலிருந்து மீட்கப்பட்டு சனிக்கிழமை கரைக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த மீனவா், மண்டபம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் தங்கமரைக்காயரின் மகன் ஆவாா்.
இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவா் எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவா் சீனி இப்ராஹிம் ஷாவுக்கு மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளனா். எனவே தமிழக அரசு இவரது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.