பயங்கரவாத தாக்குதல்: உள்துறை அமைச்சா் பதவி விலக வேண்டும் -தொல்.திருமாவளவன்
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அவா் புதன்கிழமை அளித்த பேட்டி:
காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும். மத்திய பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பாஜக எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி உள்ளது. நாட்டின் உளவுத் துறை தோல்வி அடைந்திருப்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.
அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ அகற்றிவிட்டால் அங்கு பயங்கரவாதம் இருக்காது என்று பாஜக தொடா்ந்து கூறிவந்தது. பிறகு அரசியல் சட்டப்பிரிவு 370 அகற்றிவிட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்லலாம் எனத் தெரிவித்தாா்கள். அதை நம்பி அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
எனவே, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இதற்கு பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.